Wednesday 29 April 2015

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 3


ஸ்ரீரங்கம் கோவில் காவேரி ஆற்றின் சீற்றத்தாலே பலமுறை மண் மேடு  இட்டும் வெள்ள நீரினால் அவதியுற்றும் வந்ததை கண்டு அதை மாற்ற திருவரங்கத்தை அப்போது நிர்வகித்து வந்த "கூரநாராயண ஜீயர் " கந்தாடை தோழப்பருடன் இணைந்து இந்த மாபெரும் முயற்சியில் ஈடுபட்டார் ..என்பதை பார்த்தோம் ..

நாம் முன்பே பார்த்தது போல் சிந்தாமணி பகுதி மக்கள் இந்த மாறுதல் அரங்கனையும் அவன் திருவரங்கத்தையும் காக்கவே என்று சொல்லியும் தங்கள் நிலங்களை அளிக்க மறுத்தே வந்தனர் .. அவர்களை கூரநாராயண ஜீயர் தனது மந்திர சக்தியால் சமாதானப்படுத்தி கைகொண்டார்.

கோவில் திருவோழுகு இந்த விசயத்தில் நிறைய தோப்புகளை நீக்கி திருவரங்கத்தின் தென் புரத்தின் வழியாக காவேரி வெட்டப்பட்டதை கூறுகிறது ..

இன்றும் காவேரி ஆறு மேலூருக்கு அருகில் இப்படி திரும்பி இருப்பதை காணலாம் ... இந்த மாற்றம் நடந்த பிறகு முன்பு தென் புறம் (அதாவது இன்று காவேரி ஓடும் இடத்தில் இருந்த ) அய்யானர் கோவில் மற்றும் பிடரி கோவில்களை வட புறம் நகர்த்தி கட்டப்பட்டது ..

தற்கால மேலூர் ஐய்யனார் கோவிலில் உள்ள ஒரு தவக்கோல ஜைன மத துறவியின் சிலை .. அன்று ஸ்ரீரங்கத்தில் ஜைன அகரங்கள் இருந்தமைக்கு ஒரு சான்று .. (அதை அவர்கள் மணவாள மாமுனிகள் என்று எழுதி இருக்கிறார்கள் )

காவேரியில் இருந்து ஒரு அணியரங்கன் வாய்த்தலை (regulator ..இன்று அணைக்கரை என்கிற இடம் ) கட்டுவித்து , ஒரு வாய்க்காலை வெட்டி வைத்து ... அந்த வாய்க்கால் முன்பு காவேரி சென்ற அதே பாதையில் செல்லும்படியாக செய்து !!( இன்று இருக்கும் அந்த வாய்க்கால்தான் அந்நாளைய காவேரியின் தென் கரை )  இதற்காக கரை காப்பானாக தனது சீடன் "காருணாகர தாசன் " என்போனை அவர்  நியமித்தார் ..

இந்த ஆறு (இன்று அம்மாமண்டபம் சாலையில் ராஜகோபுரம் முன் உள்ள பாலம் இதன் மீதுதான் செல்கிறது ) மலட்டு ஆறு என்றே உள்ளூர் வாசிகளால் அறியப்பட்டு வந்துள்ளது ..

இந்த சிறிய வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் வட புறம் நாணல் நடப்பட்டு (அந்த வாய்க்காலில் இருந்து ராஜகோபுரம் வரை ) நிலம் மலடு ஆக்கப்பட்டதை .. கோவில் ஒழுகு மற்றும் கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றான் ..

ஒரு பெரிய ஆறு ஓடிய பாதையில் பல நூறு அடி ஆழம் வரை வெறும் மணல் மட்டுமே இருக்கும் .. அதில் எந்த ஒரு செடியும் வளராது .. அவற்றை மாற்ற நாணல் செடிகளை வளர்த்து இன்று நீங்கள் காணும் பசுமையான பகுதியாக அவற்றை மாற்றிய அந்த விஞ்ஞான முன்னோர்களை என்ன சொல்வது???

...

கூரனாரயனர் என்கிற அந்த மகான் நமது ஸ்ரீரங்கத்தை ஒரு எந்திரம் போல அமைத்து பல நெடும் காலம் நாம் அரங்கன் நகர் வாழ பல கோவில்களையும் மந்திரப்பூர்வமாக அமைத்தார்

காவேரி சென்ற பாதையில் கூரனாராயனர் கட்டிய கோவில்களை வரும் நாட்களில்  பார்ப்போம்..




காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 2
காவிரியின் மாற்றம் பற்றிய கல்வெட்டுப்படிவங்கள் படங்கள் முந்தைய பதிவுகளில் பார்த்தீர்கள் .. அவை மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில் 1198 CE இல் பொறிக்கப்பட்டது ..


.இந்த கல்வெட்டுக்களை முழுமையாக படித்தோமேயானால் வெள்ளைக்காரன் வந்துதான் நில அளவை பற்றிய அறிவு நமக்கு (தமிழர்க்கு ) கிடைத்தது என்கிற ஒரு தவறான எண்ணம் தகர்க்கப்பட்டது!!


அன்று காவேரியில் இன்று காணும் மணல் கொள்ளை இல்லாதபடியால் .. வெள்ளப் பெருக்கு ஏற்ப்பட்டு பல விளைநிலங்கள் மண் மேடு இட்டு பயனில்லாமல் போய்விட்டது..


முதலில் "அண்ணவாயில் உடையான் காங்கேயராயர் " என்பவர் இதற்க்கெல்லாம் நிர்ணயம் செய்யும் ஒரு பொது அதிகாரியாக நேமிக்கப்பட்டார் ..


திருவரங்கம் கோவில் நிலங்களும், திருவானைக்கா கோவில் நிலங்களும் தனி தனியே அளந்து சுதர்சன சக்கரம் பொதித்த சின்னம் ஸ்ரீரங்கம் நிலத்திற்கும் , திரிசூலம் பொறித்த சின்னம் திருவானைக்கா கோவில் நிலங்களுக்கும் இடப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டன ..


இவ்வாறு செய்யும் காலத்து .. சிந்தாமணி கிராமத்து (தற்கால அண்ணாசிலை பகுதி ) மக்கள் தங்களது எதிர்ப்பை கிராமத்து எல்லையில் படுத்து தெரிவித்த விசயமும் சொல்லப்பட்டு உள்ளது ..(1198 ஆம் ஆண்டு நமது ஊர் எப்படி இருந்தது .. நமக்கு நாகரீகம் சொல்லிக்குடுத்தாக சொல்லப்படும்  வெள்ளைக்காரன் ஊர் எப்படி இருந்தது என்று உங்கள் முடிவுக்கே விடுகிறேன் )

இவ்வாறு தனியார் நிலங்கள் எடுக்கப்பட்டதற்கு மாற்றாக கொடதிட்டை (தற்கால கொத்தட்டை ) என்கிற கிராமம் அவர்களுக்கு மாற்றாக வழங்கப்பட்டது ..

காவேரி ஆறு ஸ்ரீரங்கத்திற்கு மேற்கே மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள புந்நாக தீர்த்தம் (நம்பெருமாள் ஜீயபுரம் செல்லும் போது இங்கு தீர்த்தவாரி கண்டருலுவார். எனது ஜீயபுரம் புகைப்பட, காணொளி காட்சிகளிலும் இதை காணலாம்) அருகில் இருந்து தென் புறமாக திருப்பி தற்போதைய இடம் வழியாக திருப்பப்பட்டது ..

திருவாழி பொருத்திய கற்கள் பற்றிய செய்திக்காக ஒரு படம் போட நினைத்தேன் .. அதற்காக அதே காலத்தை ஒத்த ஒரு படம் .


. இது தெற்கு உத்திர வீதியில் உள்ள மணவாள மாமுனிகள் சந்நிதி வாசலில் உள்ள பாண்டியன் காலத்து சின்னம் .வருடம் 1251 CE .

.இது அந்த அரசனின் தளபதி தஞ்சலூர் உடையான் வர்ந்தருவான் பல்லவராயன் திரிதண்டி சன்யாசிகளுக்கு கட்டியது ..(மணவாள மாமுனி இந்த கல்வெட்டு (மற்றும் மண்டபம் )வைத்த போது பிறந்திருக்கவில்லை!!!

பொன் வேய்ந்த பாண்டியன் காலத்து கல்வெட்டு 1251

இந்த மடம் கட்டப்பட்டபோது மணவாள மாமுனிகள் பிறக்கவே இல்லை !!! (அந்த சக்கர சின்னத்தை பல முறை அவர் தொட்டு இருக்ககூடும் !!) 
விஜயராகவன் கிருஷ்ணன்

காவேரியின் பாதை மாற்றம் - பாகம் 1




திருவரங்கத்தின் சிறப்பே காவேரித்தாய் அரங்கனை மாலையாக பெருமை சேர்ப்பது எங்கும் காணாத ஒன்றே!!

இப்படியான ஒரு மிகப்பெரிய நதியை மூன்றாம் குலத்துங்க சோழன் (1178-1218) காலத்தில் தற்சமயம் உள்ள ராஜகோபுரம் அருகில் பாய்ந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து தற்போது இருக்கும் இடத்திற்கு கிட்ட தட்ட ஒரு கிலோ மீட்டர் தள்ளி கட்டு வித்த மிக வரலாற்று சிறப்பு மிக்க விசயம் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகளை நீங்கள் இங்கு காண்கிறீர்கள் .

இந்த பதிப்பு வார நாட்களில் முழுமையாக வந்தால் படிக்க முடியாது என்பதால் சிறிது சிறிதாக எழுதலாம் என்று நினைக்கிறேன் ..


நாளையில் இருந்து இந்த கட்வேட்டுக்கள் மற்றும் இன்றைய தினம் அன்று காவேரி பாய்ந்த இடங்கள் எவை எவை என்று பார்ப்போம் .


.இதில் பல சுவாரசியமான விசயங்களை காண்போம் !!!


விஜயராகவன் கிருஷ்ணன்